முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல் மந்திரியுமான மனோகர் பாரிக்கர் (வயது 63) உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.
பாரிக்கரின் உடல் இன்று காலை பான்ஜிம் நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 9.30 மணி முதல் 10.30 மணி வரை அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக கலா அகாடமிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று பிற்பகல் கோவா வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ மந்திரி நிர்மலா சீதாரமன் உள்ளிட்டோர் மனோகர் பாரிக்கர் உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.