இந்தியாவின் குடியரசு தினவிழாவில் பங்கேற்க வந்துள்ள சிறப்பு விருந்தினர்களை டெல்லியில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
இந்தியாவின் குடியரசு தினவிழா நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தலைநகர் டெல்லியில் நடக்க உள்ள அணிவகுப்பில் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்பது வழக்கம். முன்பு எப்போதும் இல்லாத வகையில், ஆசியான் அமைப்பில் உள்ள 10 நாடுகளின் தலைவர்கள் இந்த ஆண்டு பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.
இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, சிங்கப்பூர் பிரதமர் லீ சைன் லூங், வியட்நாம் பிரதமர் குயென் யுவான் ஹுக், மலேசிய பிரதமர் முகம்மது நஜிப் அப்துல் ரசாக், தாய்லாந்து பிரதமர் ஜெனரல் சான் ஓ சா, மியான்மர் தலைமை ஆலோசகர் ஆங் சான் சூகி, பிலிப்பைன்ஸ் அதிபர் டோட்ரிகோ டடெர்டே, புருனே மன்னர் ஹாஜி ஹஸ்ஸானல் போல்க்யா வாதாதுலா, லாவோஸ் பிரதமர் தோங்லூன் சிஸோலித் மற்றும் கம்போடியா பிரதமர் ஹன் சென் ஆகிய 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். ஏசியான் - இந்தியா மாநாட்டிலும் அனைத்து தலைவர்களும் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.
இந்நிலையில், குடியரசு தினவிழாவில் பங்கேற்க இந்தியா வந்துள்ள சிறப்பு விருந்தினர்களை பிரதமர் மோடி இன்று டெல்லியில் சந்தித்து பேசினார்.