சென்னை:
சென்னை வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் இன்று மாலை அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இது தவிர அரசு திட்டங்கள் தொடக்க விழாவும் நடைபெறுகிறது. அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. அரசு நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக மற்றொரு மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மாலை 3.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவரை, கவர்னர் பன்வாரிலால் புரோகித் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த வரவேற்பைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு மோடி புறப்பட்டு சென்றார். முதலில் அரசு விழா நடைபெறுகிறது. விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மத்திய அரசு நிறைவேற்றி உள்ள பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் பங்கேற்கின்றனர். #ModiInChennai