செய்திகள்

குஜராத்: பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டார்

குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, பிரதமர் மோடியுடன் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை இன்று காரில் சென்று பார்வையிட்டார்.

மாலை மலர்

ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே குஜராத் மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று மதியம் அகமதாபாத் வந்த ஷின்ஸோ அபே மற்றும் அவரது மனைவி அகி அபேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மந்திரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேராக மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு சாலை
மார்க்கத்தில் காரில் சென்றார். அவருடன் பிரதமர் மோடியும், மந்திரிகளும் சென்றனர்.

ஆசிரமம் செல்லும் வழியில் சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்களுக்கு இரு பிரதமர்களும் கையசைத்தபடி சென்றனர். மேலும், ஆங்காங்கே அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலைநிகழ்ச்சிகளை இருவரும் கண்டுகளித்தனர்.

சபர்மதி ஆசிரமம் சென்ற ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

பிரதமர் மோடியுடன் ஆசிரமத்தை சுற்றிப் பார்த்த அவர், அங்குள்ள சபர்மதி ஆற்றின் கரையில் அமர்ந்து பேசி மகிழந்தனர். அதன்பின்னர், அபேவும், மோடியும் ஆசிரமத்தில் உள்ள வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டனர்.