செய்திகள்

முன்னாள் மத்திய மந்திரி சந்தோஷ் மோகன் தேவ் மரணம்: பிரதமர் மோடி, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் இரங்கல்

காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி சந்தோஷ் மோகன் தேவ் இன்று காலை காலமானார். அவரது மரணத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மோடி, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மாலை மலர்

அசாம் மாநிலம் சில்சார் பகுதியில் வசித்து வந்தவர் சந்தோஷ்மோகன் தேவ்(83). முன்னாள் மத்திய மந்திரியான இவர். கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் சந்தோஷ் மோகன்தேவ் இன்று காலை அவரது வீட்டில் மரணம் அடைந்தார்.

மன்மோகன்சிங் முதல்முறையாக பிரதமராக இருந்த மந்திரி சபையில் கனரக தொழில்துறை மந்திரியாக இருந்தார். சந்தோஷ் மோகன் தேவ், முதலில் 1980-ஆம் ஆண்டில் பாராளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டார். அசாம் மாநிலத்தின் சில்சார் தொகுதியிலிருந்து ஐந்து முறையும், திரிபுராவில் இருந்து இரண்டு முறையும் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் என்பது
குறிப்பிடத்தக்கது. இவரது ம்றைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


  
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ’’மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு செயலாற்றி வந்த சந்தோஷ் மோகன் தேவ் காலமானது துயரகரமானது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் மத்திய மந்திரி சந்தோஷ் மோகன் தேவ் மரணத்துக்கு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.