செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.

தமிழகத்தில் துணை முதல்வராக பதவி வகித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

புதுடெல்லி:

தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ். நேற்று தனது ஆதரவாளர்களுடன் டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். ஓபிஎஸ் உடன் அவரது ஆதரவாளர்கள் மைத்ரேயன், கே.பி.முனுசாமி ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

ஏற்கனவே கடந்த 6 ஆம் தேதியன்று டெல்லி சென்ற ஓபிஎஸ் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். அப்போது மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்க சென்றதால் மோடியை சந்திக்க முடியவில்லை.

இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பி.எஸ் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு இன்று காலை சென்றார். அங்கு அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது தமிழக பிரச்சினைகள் குறித்து பேசினார்.

அ.தி.மு.க.வின் சின்னம் குறித்த விசாரணை தேர்தல் ஆணையத்தில் உள்ள நிலையில், ஓ.பி.எஸ்.-ன் டெல்லி பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக பிரதமர் மோடியை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.