விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி கடந்த 2 ஆண்டுகளாக பிளஸ்-2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை பெற்று வருகிறது. தற்போது வெளியான பொதுத்தேர்வு முடிவிலும் இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சியை பெற்று சாதனை படைத்துள்ளது.
இதையடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று பள்ளியில் பொதுத்தேர்வு எழுதிய 39 மாணவர்களுக்கும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கினார். அனைவரும் தேர்ச்சி அடைந்தால் பரிசு வழங்குவதாக ஏற்கனவே அவர் தெரிவித்து இருந்தார். அதன்படி தற்போதும் முழு தேர்ச்சியை பெற்று இருப்பதால், மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார். மேலும் இதற்கு உறுதுணையாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்பட அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார்.