புதுடெல்லி:
பிரபல இந்தி நடிகர் சசி கபூர் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயூடு, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த சசி கபூர் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் நேற்று நெஞ்சு எரிச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று மாலை தனது 79-வது வயதில் அவர் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறை மற்றும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயூடு, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சசி கபூரின் மறைவு செய்தி கேட்டு வருந்துகிறேன். அவர் இந்திய மற்றும் சர்வதேச படங்களில் திறமையான நடிப்பினால் நன்கு அறியப்பட்ட நடிகர். இந்தியா சினிமாவுக்கு தயாரிப்பாளர் மற்றும் நாடக இயக்கத்தில் முக்கிய பங்குவகித்த வகையிலும் அவரது பணி பாராட்டுக்குறியது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்”, என கூறிப்பிட்டுள்ளார்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயூடு வெளியிட்ட இரங்கல் செய்தியில், “சசி கபூரின் மறைவு செய்தி வேதனை அளிக்கிறது. எண்ணற்ற திரைப்படங்களில் அவர் நடித்துள்ள வேஷங்கள் அவரை நீண்டகாலம் நம் நினைவில் வைக்கும். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்”, என கூறியுள்ளார்.