செய்திகள்

சிறுமி பலாத்காரம் நாட்டுக்கே அவமானம் - ஜனாதிபதி வேதனை

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன பிறகும் கதுவா சிறுமி பலாத்காரம் போன்ற சம்பவம் நடப்பது நாட்டுக்கே அவமானம். வெட்கக்கேடானது என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறி உள்ளார்.

ஜம்மு:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக காஷ்மீர் சென்றார். அவருடன் அவரது மனைவி சவீதா கோவிந்தும் சென்றார்.

ராம்நாத் கோவிந்தை கவர்னர் என்.என். வோரா, முதல்-மந்திரி மெகபூபா முப்தி, சபாநாயகர் மற்றும் மந்திரிகள் வரவேற்றனர்.

ஜம்முவின் கத்ரா பகுதியி உள்ள ஸ்ரீமாதா வைஷ்ணவதேவி பல்கலைக் கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார்.

அப்போது கதுவா பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.

இது தொடர்பாக ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:-

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன பிறகும் நாட்டின் எந்த பகுதியிலும் கதுவா சிறுமி பலாத்காரம் போன்ற சம்பவம் நடப்பது நாட்டுக்கே அவமானம்.  வெட்கக்கேடானது. எந்த மாதிரியான சமூகத்தை நாம் உருவாக்கி கொண்டு இருக்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டும்.

எந்த ஒரு சிறுமிக்கோ அல்லது பெண்களுக்கோ இது போன்ற சம்பவம் ஏற்படாமல் உறுதி செய்வது நமது பொறுப்பாகும்.

காமன்வெல்த் விளையாட்டில் மேரிகோம், மனிகா பத்ரா, மீராபாய் சானு, சங்கீதா சானு, மனு பாக்கர், வினேஷ் போகத், சாய்னா நேவால், ஹீனாசிந்து போன்ற இந்தியாவின் மகள்கள் நமக்கு கவுரவத்தை தேடி தந்துள்ளனர்.

இவ்வாறு ராம்நாத் கோவிந்த் பேசினார். #tamilnews

SCROLL FOR NEXT