செய்திகள்

ஜெயேந்திரர் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் - காங்கிரஸ் தலைவர் ராகுல் இரங்கல்

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மாலை மலர்

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் இன்று காலமானார். சங்கர மடத்தில் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பக்தர்கள் இறுதி மரியாதை செலுத்தி வருகிறார்கள். இதனால் சங்கர மடத்தில் இன்று ஏராளமான பக்தர்கள் திரண்டுள்ளனர். நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை தந்து இறுதி மரியாதை செலுத்த உள்ளனர். இதனால் அவரது உடல் நாளை அடக்கம் செய்யப்பட உள்ளது.

ஜெயேந்திரர் மறைவுக்கு நாடு முழுவதிலும் உள்ள ஆன்மீக தலைவர்கள் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜெயேந்திரர் மறைவு குறித்து கேள்விப்பட்டு மனவேதனை அடைந்ததாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். உயரிய ஆன்மீக தலைவர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியை நாடு இழந்துவிட்டதாகவும், அவரது சீடர்களுக்கும் அவரது போதனைகளை பின்பற்றுவோருக்கும் தனது இரங்கலை தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஜெயேந்திரர் மறைவு குறித்த செய்தி அறிந்து நான் வேதனை அடைந்தேன். அவரது போதனைகள் உலகெங்கும் உள்ள பக்தர்களால் மதிக்கப்படுகிறது. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன்” என கூறியுள்ளார்.