காஞ்சி:
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று மாலை 3 மணியளவில் காஞ்சிபுரம் வந்தார். காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கோயில் மற்றும் சங்கர மடத்துக்கு குடியரசுத் தலைவர் சென்றார்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் முதலில் பிரணாப் தரிசனம் செய்தார். கோவில் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது. சிறப்பு பூஜையில் வழிபட்டார்.
பின்னர், காஞ்சி சங்கரமடத்திற்கு வந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஜெயேந்திர சரஸ்வதி மற்றும் விஜயேந்திர சரஸ்வதி ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றார்.
முன்னதாக கடந்த கடந்த மே 21ம் தேதி உதகை வருகை புரிந்த பிரணாப் முகர்ஜி, காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சியம்மன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், சங்கர மடம் ஆகிய இடங்களுக்கு வருவதற்கு திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரால் வர இயலவில்லை. இதை நிறைவேற்றும் வகையில், இன்று அவர் காஞ்சிபுரம் வந்துள்ளார்.
பிரணாப் முகர்ஜியின் வருகையை ஒட்டி, காஞ்சிபுரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காஞ்சிபுரம் நகரில் எஸ்.பி., சந்தோஷ் ஹதிமனி தலைமையில், 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
முன்னதாக, தலைநகர் புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அரக்கோணம் ராஜாளி கடற்படை விமான தளத்திற்கு பிரணாப் முகர்ஜி வந்தார். அங்கு, பிரணாப் முகர்ஜியை ஆட்சியர் பொன்னையா, அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் வரவேற்றனர். அங்கிருந்து கார் மூலம் காஞ்சிபுரம் சென்றார்.