நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வாராக்கடன் ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. டிசம்பர் 2016 வரை வங்கிகளின் மொத்த வாராக் கடன் ரூ.6.07 லட்சம் கோடியாக உள்ளது. இதில் பொதுத்துறை வங்கிகளின் பங்கு ரூ.5.02 லட்சம் கோடியாகும்.
அந்த வகையில் தொழில் அதிபர் விஜய் மல்லையா மட்டும் வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளார். அதை திரும்ப செலுத்தாமல் இந்தியாவில் இருந்து தப்பி ஓடி லண்டனில் பதுங்கியுள்ளார்.
வங்கிகளுக்கு பெரும் சுமையாக உள்ள வாராக் கடன்களை வசூலிக்கும் வகையில் வேண்டுமென்றே வங்கிகளை ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
அதற்கான அவசர சட்டம் மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்டது. இதன்மூலம் கடன் செலுத்தும் தகுதி இருந்தும் கடனை திரும்ப செலுத்தாதவர்கள் மீது ரிசர்வ் வங்கி நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியும்.
இந்த அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இது ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.