லுசாகா:
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்று நாட்கள் பயணமாக ஆப்ரிக்க நாடுகளுக்கு சென்றுள்ளார். முதற்கட்டமாக எக்குவடோரியல் கினியாவுக்கு சென்றார். அதனை தொடர்ந்து நேற்று சுவாசிலாந்து நாட்டுக்கு சென்றார்.
சுவாசிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு ஜாம்பியா நாட்டிற்கு சென்ற ராம்நாத் கோவிந்த் லுசாகா நகரில் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘தற்போதைய சூழ்நிலையில் இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் நிச்சயமாக பொருளாதாரத்தில் இந்தியா சூப்பர் பவர் நாடாக விளங்கும்’ என்றார்.
இந்நிலையில், இந்தியா - ஜாம்பியா இடையே இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு உள்ளிட்ட 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. நீதித்துறை ஒத்துழைப்பு, அதிகாரிகள் மற்றும் தூதர அதிகாரிகளுக்கு பரஸ்பர விசா சலுகை உள்ளிட்ட ஒப்பந்தங்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் கையெழுத்தானது. #TamilNews