செய்திகள்

குடியரசு தின கொண்டாட்டம்: தேசியக் கொடியை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றினார்

நாட்டின் 69-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் டெல்லியில் மூவர்ண தேசியக் கொடியை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றினார். #RepublicDay

மாலை மலர்

நாட்டின் 69-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் வழக்கமாக, ஏதேனும் ஒரு நாட்டின் தலைவர் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார். ஆனால், இம்முறை 10 ஆசியான் நாடுகளின் தலைவர்கள், இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, சிங்கப்பூர் பிரதமர் லீ சைன் லூங், வியட்நாம் பிரதமர் குயென் யுவான் ஹுக், மலேசிய பிரதமர் முகம்மது நஜிப் அப்துல் ரசாக், தாய்லாந்து பிரதமர் ஜெனரல் சான் ஓ சா, மியான்மர் தலைமை ஆலோசகர் ஆங் சான் சூகி, பிலிப்பைன்ஸ் அதிபர் டோட்ரிகோ டடெர்டே, புருனே மன்னர் ஹாஜி ஹஸ்ஸானல் போல்க்யா வாதாதுலா, லாவோஸ் பிரதமர் தோங்லூன் சிஸோலித் மற்றும் கம்போடியா பிரதமர் ஹன் சென் ஆகிய 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

அணிவகுப்பு நடைபெறும் ராஜ்பாத்துக்கு பிரதமர் மோடி முதலில் வருகை தந்தார். அவரை அடுத்து, 10 நாடுகளின் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக வருகை தந்தனர். பின்னர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வீரர்கள் அணிவகுப்புடன் வருகை தந்தார். அவரை பிரதமர் மோடி வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றார்.

கடந்தாண்டு நவம்பர் மாதம் 18-ம் தேதி காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா பகுதியில் உள்ள ஹாஜின் என்ற பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த என்கவுண்டரில் விமானப்படையை சேர்ந்த கம்மேண்டோ ஜே பி நிராலா, மூன்று தீவிரவாதிகளை சுட்டுக்கொன்று தானும் வீர மரணம் எய்தினார். அவரது இந்த தியாகத்தை பாராட்டி இந்த ஆண்டுக்கான அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினரிடன் ஜனாதிபதி இந்த விருதை வழங்கினார்.