செய்திகள்

திரிபுராவின் மாநில பழமானது அன்னாசி - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு

திரிபுராவின் மாநில பழமாக அன்னாசி பழத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று அறிவித்துள்ளார். #RamNathKovind #StateFruitofTripura

அகர்தலா :

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இரண்டு நாள் பயணமாக விமானப்படை சிறப்பு விமானத்தின் மூலம் இன்று காலை 11 மணியளவில் திரிபுரா மாநிலத்தில் உள்ள உதய்பூர் வந்தடைந்தார். அங்கு, சப்ரூம் - உதய்பூர் இடையே புதிதாக போடப்பட்டுள்ள இருவழி தேசிய நெடுஞ்சாலையை அவர் திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து, அங்குள்ள மாதா திரிபுரேஷ்வரி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த ராம்நாத் கோவிந்த், அம்மாநில தலை நகர் அகர்தலாவில் உள்ள ரபிந்தர சதபர்ஷிகி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இந்நிகழ்சியில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திரிபுரா மாநில பழமாக அன்னாசி பழத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

திரிபுராவில் நிலவும் சிறந்த பருவ நிலைகள், வளமான மண் மற்றும் தாராளமான மழைப்பொழிவு ஆகியவை அம்மாநிலத்தில் தோட்டக்கலை துறை வளர்ச்சிக்காக மிகப்பெரிய அளவிலான வாய்ப்புகளை வழங்குகின்றன. 

மற்ற பகுதிகளில் விளையும் அன்னாசி பழங்களை விட திரிபுராவில் விளையும் அன்னாசி பழங்களின் தரம் சிறந்தது என நாடு முழுவதும் பரவலாக கருதப்படும் நிலையில் இந்த அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #RamNathKovind #StateFruitofTripura