செய்திகள்

இன்று 100வது நினைவுதினம்: ஜாலியன் வாலாபாக் தியாகிகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, பிரதமர்

ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவர்களின் தியாகத்தை ஒருபோதும் மறக்க முடியாது என ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நினைவு கூர்ந்துள்ளனர். #JallianwalaBagh #PMModi

1919–ம் ஆண்டு ஏப்ரல் 13–ந்தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் ஒரு அமைதியான பொதுக்கூட்டம் நடந்தது. இந்தியர்களின் பேச்சுரிமை உள்பட அனைத்து உரிமைகளையும் பறிக்கும் கொடிய ரவுலட் சட்டத்தை எதிர்த்தும், ஏற்கனவே இந்த சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் கைது செய்யப்பட்டு, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பலர் கொல்லப்பட்டது ஆகியவற்றை கண்டித்தும் நடந்த அகிம்சை கூட்டம்தான் அது.

பிரிகேடியர் ஜெனரல் ரொனால்டு டயர் என்ற வெள்ளைக்காரர் தலைமையில் வந்த ஆங்கிலேய ராணுவ படை, கூடியிருந்தவர்களை கலைந்து செல்லும்படி எச்சரிக்கை விடுக்காமல், பீரங்கியால் சுட்டு வீழ்த்தினர்.  இந்த சம்பவத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் நிகழ்ந்து 100 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த சம்பவத்தின் நூற்றாண்டு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தி உள்ளார்.

“100 ஆண்டுகளுக்கு முன், நமது சுதந்திர போராட்ட தியாகிகள் ஜாலியன் வாலாபாக்கில் உயிர்த்தியாகம் செய்தனர். அது ஒரு கொடூரமான படுகொலை, மனித நாகரிகத்தின் மீது படிந்த ஒரு கறை. அந்த தியாகத் தினத்தை ஒருபோதும் மறக்க முடியாது. உயிர்நீத்த தியாகிகளுக்கு நாம் மரியாதை செலுத்துவோம்” என ஜனாதிபதி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில், “ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவர்களின் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது.  நாட்டின் முன்னேற்றத்துக்கு மேலும் கடுமையாக உழைக்க ஜாலியன் வாலாபாக் நினைவு உத்வேகம் அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT