17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
உலகின் மிகப்பெரிய தேர்தலை நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்திற்கு வாழ்த்துக்கள். ஒருமுறை வெற்றி பெறச் செய்து ஆட்சியை ஏற்படுத்திய மக்கள், இந்த அரசுக்கு மற்றொரு வாய்ப்பு தந்துள்ளனர். மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள இந்த அரசு, மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற பாடுபடும். மக்கள் அரசுக்கு அளித்த அமோக ஆதரவால் கூடுதல் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் உத்வேகம் பெற்றுள்ளது.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதே மத்திய அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களவையில் அதிகம் பேர் முதல்முறை வெற்றி பெற்றவர்களாக உள்ளனர்.