செய்திகள்

ஜனாதிபதி 13-ந் தேதி காஞ்சீபுரம் வருகிறார்

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வருகிற 13-ந்தேதி காஞ்சீபுரம் வருகிறார். இதையோட்டி காஞ்சீபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

மாலை மலர்

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த மே மாதம் 24-ந்தேதி காஞ்சீபுரம் வருவதாக இருந்தது. அதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. திடீரென அவரது வருகை நிர்வாக காரணங்களால் ரத்து ஆனது.

இந்தநிலையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வருகிற 13-ந்தேதி(செவ்வாய்க் கிழமை) டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் வேலூர் மாவட்டம் அரக்கோணம் வருகிறார். அங்கு இருந்து குண்டு துளைக்காத கார் மூலம் காஞ்சீபுரத்திற்கு வருகிறார்.

அங்கு சங்கர மடத்திற்கு சென்று காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெறுகிறார். பின்னர் சங்கரமடத்தில் முக்தி அடைந்த காஞ்சி மகா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி பிருந்தாவனத்திற்கு செல்கிறார்.

இதையடுத்து காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்கிறார்.