கொல்கத்தா:
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு வகையிலான மக்கள் நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி, நிறைவேற்றப்பட்டு வருகிறது. அவ்வகையில், வருமானத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மக்கள் விறகு மற்றும் சானம் போன்றவற்றை பயன்படுத்தி சமையல் செய்வதை தவிர்க்கும் வகையில் இலவசமாக கியாஸ் சிலிண்டர் இணைப்புகளை வழங்க மத்திய அரசு தீர்மானித்தது.
8 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ‘பிரதமரின் உஜ்வாலா திட்டம்’ என்று அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தை உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த 1-5-2016 அன்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். மூன்றாண்டுகளுக்குள் நாட்டிலுள்ள ஐந்து கோடி குடும்பங்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்களை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
கடந்த 3-4-2017 நிலவரப்படி இரண்டு கோடி குடும்பங்கள் இந்த திட்டத்தால் பயன் அடைந்ததாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள தனது பிறந்த ஊரான ஜான்கிபூர் நகரில் உள்ள தனது இல்லத்தில் இன்று பத்து பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்களை வழங்கி, வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் இதுவரை இரண்டரை கோடி கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.