செய்திகள்

லாரி - கார் மோதிய விபத்தில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா மயிரிழையில் உயிர் தப்பினார்

குஜராத் மாநிலத்தில் இன்று விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா காரின் மீது லாரி மோதிய பயங்கர விபத்தில் மயிரிழையில் அவர் உயிர் தப்பினார். #pravintogadia #truckhits

மாலை மலர்

அகமதாபாத்:

விஸ்வ இந்து பரிஷத் இயக்கத்தின் சர்வதேச செயல் தலைவராக பதவி வகிப்பவர், பிரவீன் தொகாடியா(62). உயர்ரக இசட் பிரிவு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள இவர், குஜராத் மாநிலம், சூரத் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று காரில் சென்று கொண்டிருந்தார்.

காம்ரெஜ் நகரின் அருகே பின்னால் வேகமாக வந்த லாரி அவரது காரின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை தடுப்பை உடைத்து நாசப்படுத்தி நின்றது.

தனது கார் குண்டு துளக்க முடியாத (புல்லட் புரூப்) வசதி கொண்டதாக இருந்ததால் இந்த விபத்தில் இருந்து நான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். இல்லாவிட்டால் காரில் இருந்த அனைவரும் இறந்திருப்போம் என்று தொகாடியா குறிப்பிட்டுள்ளார்.

இசட் பிரிவு பாதுகாப்பு ஏற்பாடுகளின்படி, எனது காருக்கு முன்னால் ஒரு காரும், பின்னால் ஒரு காரும், ஆம்புலன்ஸ் வாகனமும் பின்தொடர்ந்து வர வேண்டும். பக்கவாட்டிலும் ஒரு கார் பாதுகாப்பாக வரும். ஆனால், மேலிடத்தின் உத்தரவுப்படி தற்போது என் காருக்கு பின்னால் இன்னொரு பாதுகாப்பு வாகனம் அனுப்பி வைக்கப்படவில்லை.

இந்த நிலையில் என் காரின் பின்னால் வந்து மோதிய லாரியின் டிரைவர் விபத்துக்கு பின்னரும் ‘பிரேக்’ போடாமல் சாலை தடுப்பின்மீது மோதியுள்ளார். இதுதொடர்பாக, உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். #tamilnews #pravintogadia #truckhits