மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் இன்று ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பயிற்சி நிறைவு விழா நடைபெறுகிறது. இதற்காக ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவில் பங்கேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு ஆர்.எஸ்.எஸ். சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை பிரணாப் முகர்ஜியும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழாவில், காங்கிரஸைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி பங்கேற்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என பிரணாப் முகர்ஜிக்கு முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் சிலரும் கடிதம் எழுதியுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களின் தவறுகளை சுட்டிக் காட்டும்படி ப.சிதம்பரம் கூறியிருந்தார்.
ஆனால், எதிர்ப்பு கடிதங்களுக்கு பதில் அளிக்காத பிரணாப் முகர்ஜி, தான் பேசவேண்டியதை ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பேச உள்ளதாக கூறியிருக்கிறார். எனவே, இன்றைய விழாவில் பங்கேற்கும் பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்கள் குறித்து தனது தனிப்பட்ட கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.