நேபாள உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சுசீலா கார்க்கி கடந்த ஆண்டு பொறுப்பேற்றார். அவர் அந்நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நேபாள காவல் துறைத் தலைவரின் பதவி உயர்வு விவகாரம் அந்நாட்டில் சர்ச்சையைக் கிளப்பியது. அது தொடர்பான விசாரணையில் அப்பதவிக்கான தகுதிகள் குறித்து சர்ச்சை எழுந்தது. இது அதிகாரிகள் மற்றும் அரசு வட்டத்தில் அதிருப்தியை எழுப்பியது.
இதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி மீது அரசு கடும் விமர்சனங்களை முன்வைத்தது. தலைமை நீதிபதியைப் பதவி நீக்கம் செய்வது தொடர்பான தீர்மானத்தை ஆளும் கூட்டணியைச் சேர்ந்த நேபாளி காங்கிரஸ், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த இரு எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அந்நாட்டு அரசியல் சாசனத்தின் கீழ், தலைமை நீதிபதியின் பதவி நீக்கம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டாலே அவர் இடை நீக்கம் செய்யப்பட்டவர் ஆவார்.