செய்திகள்

கேரள வெள்ளப்பெருக்குக்கு அணை நிர்வாகத்தில் நடந்த தவறே காரணம் - விசாரணையில் தகவல்

கேரள மாநிலத்தில் உள்ள அணைகள் பராமரிப்பில் நடந்த தவறே வெள்ளப்பெருக்குக்கு காரணம் என விசாரணையில் கண்டறியப்பட்டு உள்ளது. #KeralaFloods

மாலை மலர்

கேரளாவில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பெய்த கனமழை மற்றும் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த பேரிழப்புக்கு மனித தவறே காரணம் என்றும், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஐகோர்ட்டில் பல வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த விவகாரத்தில் கோர்ட்டுக்கு உதவும் நண்பனாக ஜேக்கப் பி.அலெக்ஸ் என்பவரை நியமித்து வெள்ளப்பெருக்குக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி ஜேக்கப் நடத்திய விசாரணையில் மாநிலத்தில் உள்ள அணைகள் பராமரிப்பில் நடந்த தவறே வெள்ளப்பெருக்குக்கு காரணம் என கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் நிபுணர் குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்தவும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து மாநில அரசை கடுமையாக குற்றம் சாட்டியுள்ள எதிர்க்கட்சிகள், முதல்-மந்திரி பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளன. #KeralaFloods