செவ்வாப்பேட்டை:
அய்யப்பன் தாங்கலை சேர்ந்தவர் ஆனந்த். இவருடைய மனைவி ஷர்மிளா.
ஆனந்த-ஷர்மிளா தம்பதிக்கு திருமணம் நடந்து 8 வருடங்கள் ஆகின்றன. குழந்தை இல்லை. பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் எந்த பலனும் இல்லை.
இந்தநிலையில், பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்ற கிறிஸ்தவ மத போதகரை சந்தித்தனர். அவர் தன்னிடம் கடவுள் சக்தி இருப்பதாகவும் குழந்தை பாக்கியம் கிடைக்க ஜெபம் சொல்லுவதாகவும் கூறியுள்ளனர். அதற்கு பணமும் கேட்டுள்ளார்.
இதை நம்பிய ஆனந்த்- ஷர்மிளா தம்பதியினர் கிறிஸ்தவ மதபோதகருக்கு பணம் கொடுத்ததாக தெரிகிறது. ரூ.7½ லட்சம் வரை அவர் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் சொன்னபடி அந்த தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.
இதனால் ஏமாற்றம் அடைந்த ஆனந்த் பூந்தமல்லி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து கிறிஸ்தவ மத போதகர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.