செய்திகள்

பொன்னேரி அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 5 கிராம மக்கள் மறியல்

பொன்னேரி அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தடப்பெரும்பாக்கம், வேன்பாக்கம், சிங்கிலமேடு, கொடூர், பொன்னகர் ஆகிய 5 கிராம மக்கள் மறியலில் ஈடுப்பட்டனர்.

மாலை மலர்

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த தடப்பெரும்பாக்கம், கிருஷ்ணாபுரம் சாலையில் புதிதாக டாஸ்மாக் மதுக் கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

நேற்று இரவு மதுக் கடைக்கு புதிதாக போர்டும் மாட்டப்பட்டது.

இந்த நிலையில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தடப்பெரும்பாக்கம், வேன்பாக்கம், சிங்கிலமேடு, கொடூர், பொன்னகர் ஆகிய 5 கிராம மக்கள் இன்று காலை மதுக்கடை முன்பு திரண்டனர். இதில் திரளான பெண்கள் பங்கேற்றனர்.

அவர்கள் மதுக்கடைக்கு எதிராக கோ‌ஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தடப்பெரும்பாக்கம் - கிருஷ்ணாபுரம் சாலையில் மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் பொன்னேரி போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மதுக்கடையை திறக்க கூடாது, டாஸ்மாக் போர்டை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து டாஸ்மாக் போர்டு அகற்றப்பட்டது. மதுக் கடையும் திறக்கப்பட வில்லை.

இதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக் கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியலால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.