இலவசம், சலுகை என்றாலே புதுச்சேரி மாநிலம் தான் என்ற பெருமை ஒரு காலத்தில் இருந்தது. உயர்கல்வி கட்டணம், மழை நிவாரணம், கல்வி உதவித்தொகை என்றால் அள்ளிக்கொடுக்கும் மாநிலமாக புதுச்சேரி இருந்து வந்தது.
இதனால் புதுவையை ஒட்டியுள்ள தமிழக பகுதி மக்கள் புதுச்சேரியில் குடியேறுவதை லட்சியமாக கொண்டிருந்தனர். இங்கு குடியேறாவிட்டாலும் தங்களது உறவினர்கள் வீடுகளின் விலாசங்களை கொடுத்து ரேஷன்கார்டுகளை வாங்கி சலுகைகளை அனுபவித்து வந்தனர்.
ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அள்ளிக் கொடுக்கும் மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. மருந்துக்குகூட கிள்ளிக்கொடுக்காத நிலை புதுச்சேரியில் நிலவுகிறது.
தமிழகத்தில் பொங்கல் பரிசாக ரூ.1000 ரொக்கப் பணம், பொங்கல் பொருட்கள் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. புதுவை எல்லையில் தமிழக பகுதியையொட்டி வசிக்கும் மக்கள் இதைப்பார்த்து எங்களுக்கு எதுவும் இல்லையே என்று ஏங்கி வருகின்றனர்.
எனவே புதுவை மக்களின் ஏக்கத்தை தீர்க்க எந்த வழி யிலாவது ரொக்கப்பணம் கொடுக்க அரசு திட்ட மிட்டுள்ளது. இதற்காக 2 மாதத்திற்கு இலவச அரிசிக்கான ரொக்கத்தொகையாக சிவப்பு கார்டுகளுக்கு தலா ரூ.1,200-ம், மஞ்சள் கார்டு களுக்கு ரூ.600-ம், ஆதிதிராவிட மக்களுக்கு 18 வயது நிரம்பிய ஒவ்வொருவருக்கும் தலா ரூ.500-ம், மற்ற சமூகத்தினருக்கு இலவச துணிக்கான தொகை ரேஷன்கார்டு ஒன்றுக்கு ரூ.1000 வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.