தீபாவளி, பொங்கல் பண்டிகைககளின்போது சென்னை மற்றும் பிற பகுதிகளில் வசிக்கும் மக்கள், குடும்பம் குடும்பமாக பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால், ரெயில்கள், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலை மோதும். கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக டிக்கெட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்வார்கள். தற்போது ரெயில் டிக்கெட் முன்பதிவு காலம் 120 நாட்களாக நீட்டிக்கப்பட்டடுள்ளது.
இந்நிலையில் அடுத்த ஆண்டின் பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வரும் ஜனவரி 10ம் தேதி பயணிப்பதற்கான ரெயில் டிக்கெட்டுகளை இன்று முதல் முன்பதிவு செய்யலாம். இதனால் ரெயில்நிலைய கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏராளமானோர் திரண்டிருந்தனர். முக்கிய ரெயில்களில் அனைத்து சீட்களும் விரைவில் நிரம்பின.
வீட்டில் இருந்தபடியும், தனியார் ஏஜென்சி மூலமாகவும் ஆன்லைனில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் பயணத்தை உறுதி செய்தனர். ஆன்லைனில் விரைவாக டிக்கெட் எடுக்க முடியும் என்பதால் பெரும்பாலான பயணிகள் ஆன்லைனை நாடினார்கள்.