செய்திகள்

புதுவை பல்கலைக்கழகத்துக்கு தேசிய அளவில் 3-வது இடம்

2015-16-ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியலில் புதுவை பல்கலைக் கழகத்துக்கு தேசிய அளவில் 3-வது இடமும், மத்திய அரசின் 45 பல்கலைக் கழகங்களில் 9-வது இடமும் கிடைத்துள்ளது.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அனுமதியோடு தேசிய அளவில் செயல்பட்டு வரும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்தும் அமைப்பானது டெல்லியில் இயங்கி வருகிறது.

கல்வி நிறுவனங்களில் ஒட்டு மொத்த செயல்பாடுகள், திறன் சார்ந்த பயிற்றுவிப்பு முறைகள், மாணவர்களின் அறிவாற்றல், வளம், அவர்களின் தரம் அதோடு ஆய்வு நெறிமுறைகளில் கையாளப்படும் நுட்பங்கள் மற்றும் கட்டமைப்புகள் போன்றவற்றை பேராசிரியர்களை கொண்ட குழுவானது ஆய்வு செய்து தகுதி அடிப்படையில் தரவரிசை பட்டியலை அறிவிக்கும்.

இந்த நிலையில் தற்போது 2015-16-ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை தேசிய கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்தும் அமைப்பு அறிவித்துள்ளது.

இதில் புதுவை பல்கலைக் கழகத்துக்கு தேசிய அளவில் 3-வது இடமும், மத்திய அரசின் 45 பல்கலைக் கழகங்களில் 9-வது இடமும் கிடைத்துள்ளது.

புதுவை பல்கலைக்கழகம் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களுக்கான தரவரிசை பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளதை பாராட்டும் வகையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அங்கீகார விருதை அனுப்பி உள்ளது.

இதனை பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் பேராசிரியர் ராமச்சந்திரன், துணைவேந்தர் அனிஷா பஷிர்கானிடம் நேரில் வழங்கி வாழ்த்து பெற்றார். அப்போது பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்கள் பலர் உடன் இருந்தனர்.