புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி புதுக்கோட்டை வந்தார். கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ‘நீட்’ தேர்வால் 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும். மாணவ-மாணவிகள் தேர்வில் தோல்வியடைந்தால் மனம் தளராது இருக்க வேண்டும்.
இந்த மாதம் டெல்லியில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து கட்சி தலைமை மற்றும் மற்ற மாநில முதல்-மந்திரிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பேன். இந்த அமைப்பு அதிகாரமில்லாத அமைப்பு. இதனை ரத்து செய்ய வேண்டும் என மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஏற்கனவே பிரதமருக்கு எழுதிய கடிதத்தை எனக்கும் அனுப்பி உள்ளார். அதுகுறித்து பரிசீலனை செய்வேன்.
பின்னர் அவரிடம் புதுச்சேரி கவர்னராக பா.ஜ.க.வை சேர்ந்த சுப்பிரமணிய சாமி நியமிக்கப்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளதே என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.