செய்திகள்

3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் கிடையாது- புதுவை சட்டசபை செயலகம் அதிரடி

3 நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை அவர்களுக்கு சம்பளம் கிடையாது என்று புதுவை சட்டசபை செயலகம் தெரிவித்துள்ளது. #NominatedMLAs #PondicherryAssembly

மாலை மலர்

புதுவையில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பரிந்துரையின்றி பா.ஜனதா மாநில தலைவர் சாமி நாதன், பொருளாளர் சங்கர், செல்வகணபதி ஆகியோரை கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது.

மத்திய அரசு நேரடியாக நியமித்த எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் வைத்திலிங்கம் அங்கீகரிக்க மறுத்து விட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் நியமனம் செல்லும் என அதிரடியாக சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது.

அதோடு விசாரணையின்போது நியமன எம்.எல்.ஏ.க்களை சட்ட மன்றத்துக்குள் செயல்பட அனுமதிப்பார் என எதிர்பார்ப்பதாகவும் நீதிபதிகள் கூறினர்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்தை ஏற்ற சபாநாயகர் வைத்திலிங்கம் 3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் கடந்த 2-ந் தேதி நடந்த சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க அனுமதித்தார். உச்சநீதிமன்றத்தின் எதிர் பார்ப்புக்கு இணங்க நடப்பு கூட்டத்தொடரில் மட்டும் நியமன எம்.எல்.ஏ.க்களை அனுமதிப்பதாகவும், செப்டம்பர் 11-ந்தேதி வழக்கின் தீர்ப்புக்கு ஏற்ப இறுதி முடிவு எடுக்கப்படும் என சட்டமன்றத்தில் சபாநாயகர் அதிரடியாக தெரிவித்தார்.

மேலும் 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கும் வாக்களிக்கும் உரிமை இல்லை என்றும் தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

 நியமன எம்.எல்.ஏ. சாமிநாதனுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையில் செப்டம்பர் 11-ந் தேதி வரை மட்டுமே தகுதி உள்ளதாக குறிப்பிட்டுள்ள காட்சி.

இந்த நிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் சம்பளம் வழங்க சட்டசபை செயலகம் பட்டியல் அனுப்பி உள்ளது.

இதில் பா.ஜனதாவின் நியமன எம்.எல்.ஏ.க்கள் பெயர் இடம்பெறவில்லை. எனவே, ஆகஸ்டு மாத சம்பளம் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு கிடைக்காது என உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து சட்டசபை செயலகத்தில் கேட்டபோது, நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு மீண்டும் வருகிற 11 -ந் தேதி விசாரணைக்கு வருகிறது. இறுதி தீர்ப்பு வந்தபிறகே சம்பளம், சலுகைகள் குறித்து முடிவு எடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பா.ஜனதா தலைவர் சாமி நாதனிடம் கேட்டபோது, தற்போதைய நிலையில் சம்பளம் முக்கியமில்லை. ஏற்கனவே வருகை பதிவேடு மற்றும் சட்டசபை ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளோம்.