மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நாடு முழுவதும் கம்ப்யூட்டர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த அரசாணை என்பது நவீன காலத்துக்கு ஏற்ற நடவடிக்கைதான்.
பட்டாசு ஆலை விவகாரத்தில் பிரச்சனையை சரி செய்ய மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மேலும் சில பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரிகள் குறையும் என்று நம்புகிறேன்.
சென்னையில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவில், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக மு.க. ஸ்டாலின் முன்மொழிந்ததில் மேடையில் இருந்த பல தலைவர்களுக்கும் உடன்பாடு இல்லை.
பெண்கள் சபரிமலைக்கு வழிபாடு நடத்த செல்லவில்லை. குழப்பம் விளைவிப்பதற்காக அங்கு செல்கிறார்கள். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை தடுக்கும் வகையில் சில அமைப்புகள் செயல்படுவது ஏற்கத்தக்கதல்ல.
கஜா புயல் நிவாரண அறிக்கை வந்ததும், நிதி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக மத்திய அமைச்சர்களிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடியை அழைப்போம்.