கரூரில் இன்று நடைபெற்ற மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் அரசே ஆற்று மணல் விற்பனையை ஏற்று நடத்துகிறது. இதனை வரவேற்கிறேன். மணல் விற்பனையை அரசே நடத்தும் இந்த காலகட்டத்தில் முன்பை விட அதிக விலை கொடுத்து பயனாளிகள் மணலை வாங்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது ஒரு லோடு மணலை பெற 4 நாட்கள் வரை லாரிகள் காத்திருக்கும் நிலை உள்ளது. இதற்கான வாடகையும் பயனாளிகள் தலையில் கட்டப்படுகிறது. இதற்கு தீர்வு காண தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கரூரில் மருத்துவக்கல்லூரி அமைவதில் பிரச்சனை இருந்து வருகிறது. இந்த மருத்துவக்கல்லூரி அரசியல்வாதிகள் அவர்களின் ஆசாபாசங்களுக்காக கொண்டு வரப்படுகிறதா? அல்லது மாவட்ட மக்களின் நலனுக்காக கொண்டு வரப்படுகிறதா? பிரச்சனைக்கு காரணமான இருதரப்பினரும் ஒரே கட்சி மட்டுமின்றி ஒரே அணியை சேர்ந்தவர்கள்.
பிரச்சனை எதுவாக இருந்தாலும் தமிழக முதல்வர் தலையிட்டு உடனடியாக தீர்வு கண்டு கட்டுமான பணியை தொடங்க வேண்டும். இந்த அரசு நிலைத்தால் மட்டுமே அடுத்த ஆண்டே மருத்துவக் கல்லூரியை திறக்க முடியும்.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. எல்லா தரப்பினரும், அரசியல்வாதிகளும் பா.ஜ.க.வுக்கு வரவேண்டும். தமிழகத்தில் எப்படியாவது மாற்றத்தை கொண்டுவரவேண்டும்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த கால கட்டத்தில் ஒரு நல்ல அரசியல் முடிவை எடுத்தால் மகிழ்ச்சி. அவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி.
அப்போது ரஜினி பாரதிய ஜனதாவில் சேர்ந்தால் தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? என்ற கேள்விக்கு பதில் அளித்த பொன்.ராதா கிருஷ்ணன், ரஜினி மிகவும் பிரபலமானவர். எனவே முதல்வர் வேட்பாளரா என்பதை கட்சிதான் முடிவு செய்யும் என்றார்.
தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், அய்யாக்கண்ணுவின் போராட்டம் குறித்து கேட்டபோது, தமிழகத்தில் ஒரு அரசு இருக்கிறதா, இல்லையா என்ற கேட்க தோன்றுகிறது. விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பது அந்தந்த மாநில அரசின் கடமை.
மத்திய அரசு விவசாயிகளின் துயர் துடைக்கும் வகையில் வறட்சி நிவாரணமாக தமிழக அரசுக்கு ரூ.1,242 கோடியை வழங்கியுள்ளது. அய்யாக்கண்ணு கழகங்களுடன் உடன்பாடு செய்து கொண்டு போராட்டம் நடத்துகிறார் என்று நினைக்கிறேன்.
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு வைரவிழா எடுப்பது அவர்களின் சுயநலத்திற்காகத்தான். தமிழகத்தில் தி.மு.க. தனது பலத்தை இழந்து வருகிறது. மதவாத சக்திகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ரஜினி பா.ஜ.க.வில் சேரக்கூடாது என்று கூறும் திருமாவளவன் ஜாதிய சக்திகளை ஊக்குவிக்கலாமா?
பா.ஜ.க.வில் சாதி, மத பாகுபாடின்றி அனைத்து தரப்பினரும் உறுப்பினர்களாக இருந்து வருகிறார்கள். மதவாதிகள் என்றால் என்ன அர்த்தம் என விளக்க வேண்டும். தமிழக அரசின் தற்போதையை நிலைமை சிரிக்கும்படியாக இருக்கிறது.