செய்திகள்

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு: 2 முக்கிய குற்றவாளிகள் கைது

பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்பட்டதில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை:

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விரிவுரையாளர் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் உமா கொடுத்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில்குமார் மேற்பார்வையில், ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் கணேசன் (வயது 38), சேக் தாவூத் நாசர்(32), ரகுபதி(34), சுரேஷ்பால்(34) ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர்.

போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளான சென்னை கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த பரமசிவம் (32), சென்னை சிட்லபாக்கத்தை சேர்ந்த நாதன்(45) ஆகிய இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் உடனடியாக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதுவரை இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews

SCROLL FOR NEXT