பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அடுத்த வடக்கிபாளையத்தில் தனியார் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதியூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் தனது மினி ஆட்டோவிற்கு டீசல் பிடித்துள்ளார். டீசல் பிடித்த பிறகு ஆட்டோவை இயக்கியபோது, சிறிது தூரம் சென்று ஆட்டோ நின்றுள்ளது. இதையடுத்து, மெக்கானிக்கை அழைத்து ஆட்டோவில் இருந்த டீசலை பாட்டிலில் நிரப்பி பார்த்தபோது மண்ணென்னை வாசனை அடித்துள்ளது.
இதனால், பெட்ரோல் பங்கிற்கு சென்று ஊழியர்களிடம் கேட்டுள்ளார். ஆனால், ஊழியர்கள் அலட்சியத்துடன் பதில் கூறியுள்ளனர். இதையடுத்து, பொதுமக்கள் பலர் பெட்ரோல் பங்கில் திரண்டு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பங்க் முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். டீசலில் கலப்படம் செய்து விற்கும் பங்கின் உரிமத்தை ரத்து செய்யவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வடக்கிபாளையம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து கலைந்துசென்றனர்.
#tamilnews