ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாகர்கோவிலில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, எந்த மொழியும் பிறமொழி மீது திணிக்கப்படமாட்டாது என்றதுடன், தமிழர் பண்பாடு, வரலாறு, உணர்வுகள் அனைத்தையும் போற்றி பேசினார்.
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வந்து உள்ளது. 200-க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்வு அழிந்து உள்ளது. ஓர் ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 10 பெண்களுக்கு மேல் தற்கொலை செய்துகொண்டார்கள் என்ற தகவல் வேதனை தருகிறது. பாலியல் பிரச்சினைகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர், தகவல்கள் வெளியே வரக்கூடாது. பெண்ணின் கவுரவம் காப்பாற்றப்பட வேண்டும். இல்லை என்றால் அவர்கள் சமூகத்தில் வாழ முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு கூறி உள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை போலீஸ் சூப்பிரண்டு கூறியது மன்னிக்க முடியாத செயலாகும்.