செய்திகள்

டாக்டர் ஜெயச்சந்திரன், எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவு: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

டாக்டர் ஜெயச்சந்திரன், எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார். #Prapanchan #DrJayachandran

மாலை மலர்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

5 ரூபாய் டாக்டர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட டாக்டர் ஜெயச்சந்திரன் உடல்நல குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை-எளிய மக்களுக்கு குறைந்த விலையில் சிறந்த மருத்துவ சேவையை வழங்கியுள்ளார். டாக்டர் ஜெயச்சந்திரனை இழந்துவாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், அவருடைய தன்னலமற்ற சேவையை பல ஆண்டுகளாக பெற்று வந்த ராயபுரம் பகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

அதேபோல், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு இரங்கல் செய்தியில், ‘பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் உடல்நல குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவருடைய மறைவு தமிழ் இலக்கிய உலகிறகு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். பிரபஞ்சனை இழந்துவாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், எழுத்துலக நண்பர்களுக்கும், அவருடைய எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.