செய்திகள்

நவநீதகிருஷ்ணன் தற்கொலை மிரட்டல்- தலைவர்கள் கண்டனம்

காவிரி மேலாண்மை பிரச்சனையில் தற்கொலை செய்யபோவதாக நவநீத கிருஷ்ணன் எம்.பி. கூறியது பற்றி தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

மாலை மலர்

சென்னை:

காவிரி மேலாண்மை பிரச்சினையில் தற்கொலை செய்யபோவதாக நவநீத கிருஷ்ணன் எம்.பி. கூறியது பற்றி தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது உயிரைவிட வேண்டாம். அவர்கள் தங்களது பதவிகளை விட வேண்டும்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். அதைவிட்டு காங்கிரஸ் கட்சியை குறை சொல்வது சரியானது அல்ல. கடைசி நாளில் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்கப்படும் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

பிரதமரை சந்திக்க கூட நேரம் வாங்க தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி: பாராளுமன்றத்திலே நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாங்கள் ஆதரிப்போம் என்று அ.தி.மு.க. சொல்ல முன்வர வேண்டும். அல்லது எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்பட அத்தனை பேரும் ராஜினாமா செய்வோம். தமிழகத்தில் ஒரு அரசியல் நெருக்கடியை உண்டாக்கும் என்று சொல்கின்ற ஒரு பெரிய வீரம், துணிவுதான் இப்போது தேவையே தவிர தற்கொலை தத்துவம் அல்ல அடிமைகள்தான் தற்கொலை செய்வார்கள். அதிகாரத்தில் இருப்பவர்களா தற்கொலை செய்வார்கள்?

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews