செய்திகள்

பழவேற்காட்டில் கடலோர பாதுகாப்பு ஒத்திகையில் போலீஸ்காரர் மாரடைப்பால் மரணம்

பழவேற்காட்டில் கடலோர பாதுகாப்பு ஒத்திகையில் பணியாற்றிய போலீஸ்காரர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

பொன்னேரி:

சென்னை உள்பட 13 கடலோர மாவட்டங்களில் நேற்று பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது.

பழவேற்காடு கடலோர பகுதியில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட போலீசார் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

மப்பேடு போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றிய கோபி (வயது50) உள்ளிட்ட போலீசார் பழவேற்காடு அடுத்த காட்டாங்குப்பத்தில் உள்ள சிவன் கோவிலில் தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை கோபிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை உடன் இருந்த போலீசார் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கோபி மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடலுக்கு போலீஸ் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

இறந்து போன கோபியின் சொந்த ஊர் திருவள்ளூரை அடுத்த சின்னமாம்பேட்டை ஆகும். அவருக்கு கவிதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

பழவேற்காடு பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. இன்று மாலை வரை இது நடைபெறுகிறது. #Tamilnews