புவனேஸ்வர்:
தற்கொலை விளையாட்டு என்ற பெயர் பெற்றுள்ள புளூ வேல் (நீல திமிங்கலம்) எனும் ஆன்லைன் கேம், விளையாடுபவருக்கு தினசரி ஒரு பணி என மொத்தம் 50 நாட்கள் வழங்கப்படும். இதன் இறுதி பணி கேமினை விளையாடுவோரை தற்கொலை செய்ய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் சவாலை முடித்ததும் கேமினை விளையாடுபவர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இணையத்தில் இதுபோன்ற ஆபத்தான கேம்கள் சமூக வலைத்தள உதவியின்றி விளையாட முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டு இருப்பதால் பலரும் இந்த கேம் விளையாட துவங்கி, இறுதியில் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் ஏற்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவிலும் இந்த விளையாட்டிற்கு பல பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் அடிமையாகி வருகின்றனர். அந்த வரிசையில், ஒடிசா மாநிலம் கஞ்ஜம் மாவட்டத்திற்குட்பட்ட ரபாலா என்னும் இடத்தை சேர்ந்த சந்தன் பிரசாத் குந்தியா (27) என்ற இஞ்சினீயரிங் மாணவர், இந்த விளையாட்டிற்கு அடிமையாகி உள்ளார்.
அவர் இந்த விளையாட்டின் நான்கு பணிகளை முடித்துள்ளார். ஏற்கனவே தனது கையில் புளுவேல் சின்னத்தையும் வரைந்துள்ளார். அதை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கிலும் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து அவரது வீட்டிற்கு விரைந்த போலீசார் அவரை மீட்டு, அவரது கைபேசியையும் பறிமுதல் செய்தனர். உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரை கண்காணித்து இதுபோன்ற விளையாட்டில் ஈடுபடாமல் இருக்க அறிவுருத்துமாறு போலீசார் அவரது பெற்றோரிடம் கூறினர்.