தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ந்தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினார்கள். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பொதுமக்கள் இந்த போராட்ட அறிவிப்பை வெளியிட்டதுமே 21-ந்தேதி காலையில் இருந்தே தூத்துக்குடியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
கலெக்டர் அலுவலகம், ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள சிப்காட் வளாகத்தில் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டனர். ஸ்டெர்லைட் ஆலையில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து துப்பாகி சூடு, அதை தொடர்ந்து வன்முறை காரணமாக தூத்துக்குடிக்கு நெல்லை, குமரி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்டனர்.
உச்சபட்சமாக 5 ஆயிரம் போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தார்கள். கமாண்டோ படையும் வரவழைக்கப்பட்டிருந்தது. மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால் தூத்துக்குடியில் அமைதி திரும்பியது. முழுமையான அமைதி திரும்பும்வரை போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், அதன்பின்னர் போலீஸ் எண்ணிக்கை குறைக்கப்படும் எனவும் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி அறிவித்திருந்தார்.