செய்திகள்

சோமனூர் பஸ் நிலையம் இடிந்து விழுந்து 5 பேர் பலியான இடத்தில் அஞ்சலி செலுத்த போலீஸ் அனுமதி மறுப்பு

சோமனூர் பஸ் நிலையத்தில் விபத்து நடந்து ஓராண்டான நிலையில் அந்த இடத்துக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த போலீசார் மறுப்பு தெரிவித்தனர்.

கோவை:

கோவை மாவட்டம் சோமனூர் பஸ் நிலையத்தின் மேற்கூரை கடந்த ஆண்டு செப்டம்பர் 7 -ந் தேதி இடிந்து விழுந்தது.

இதில் அரசு பஸ் கண்டக்டர் சிவக்குமார்(வயது 43), சோமனூரை சேர்ந்த கல்லூரி மாணவி தாரணி(20), பல்லடம் அய்யம்பாளையத்தை ஈஸ்வரி(40) உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று முடிந்துள்ளது.

சோமனூர் பஸ் நிலையத்தில் விபத்து நடந்து ஓராண்டான நிலையில் உயிரிழந்த 5 பேருக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் அஞ்சலி கூட்டத்துக்கு கருமத்தம்பட்டி போலீசார் அனுமதி மறுத்தனர்.

இதனால் அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் நள்ளிரவில் பஸ் நிலைய வளாகத்தில் இறந்தவர்களின் உருவபடங்கள் வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

அப்போது அஞ்சலி நிகழ்ச்சி நடத்த போலீசார் அனுமதி மறுத்துவிட்டதால் வேறுவழியின்றி இரவோடு இரவாக  நிகழ்ச்சி நடத்துவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். #tamilnews

SCROLL FOR NEXT