செய்திகள்

தீபாவளி பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள்: போலீசார் அறிவிப்பு

பட்டாசு வெடிப்பது தொடர்பாக சென்னை நகர போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பொதுமக்களுக்கு அறிவுரையும் வழங்கி உள்ளனர்.

மாலை மலர்

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (புதன்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு வெடிப்பதுதான் முக்கிய அடையாளமாகும்.

பட்டாசு வெடிப்பது தொடர்பாக சென்னை நகர போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பொதுமக்களுக்கு அறிவுரையும் வழங்கி உள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

* தீபாவளி பண்டிகையையொட்டி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.

* மருத்துவமனை அருகிலோ, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலோ பட்டாசு வெடிக்க கூடாது.

* குடிசைப் பகுதி உள்ள இடங்களில் மொட்டை மாடியில் நின்றுகொண்டு ராக்கெட் வெடி வெடிக்ககூடாது.

* குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது பெற்றோர்கள் அருகில் நின்றுகொண்டு கவனித்துக்கொள்ள வேண்டும்.

* அதிக ஓசை எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

* போக்குவரத்துக்கு இடையூறாக நடுரோட்டிலும் பட்டாசு வெடிக்க கூடாது.

இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் குடிசைப்பகுதி அதிகம் உள்ள 100 இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்து 500 தீயணைப்பு வீரர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.