திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பரண்டு சக்திவேல் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தற்போது தமிழகத்தில் நீல திமிங்கலம் என்ற ‘புளூ வேல்’ என்ற விளையாட்டு வேகமாக பரவி வருகிறது. இதற்கு மாணவ-மாணவிகள் அடிமையாகி உயிர் பலி ஆகும் நிலை உள்ளது.
எனவே இந்த விஷயத்தில் பெற்றோர் தங்களது பிள்ளைகளின் நடவடிக்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ‘புளூ வேல்’ விளையாட்டை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் தனிப்படை அமைக்கப்பட உள்ளது. இந்த தனிப்படையினர் பிரவுசிங் சென்டர் உள்ளிட்ட நெட் பிரவுசிங் பகுதிகளில் கண்காணிப்பார்கள். இது குறித்து பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
நாளை (1-ந் தேதி) முதல் வாகனம் ஓட்டுவோர் கட்டாயம் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். இதனை மீறுவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்களுக்காக புதிய இணையதள சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. அதாவது சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோர், குற்றஞ்சாட்டப்பட்டோர் வழக்கு ஆவணங்களை இணையதளம் மூலம் பெறும் வசதி இன்று முதல் செயல்படுகிறது. இவை தவிர தொலைந்து போன ஆவணங்களின் அறிக்கை குறித்த விபரங்களையும் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது போலீஸ் டி.எஸ்.பி.க்கள் சந்திரன், சிகாமணி, நகர் வடக்கு இன்ஸ்பெக்டர் தெய்வம், கணினி பிரிவு இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ஜெயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், ஆகியோர் உடனிருந்தனர்.