செய்திகள்

கேரளாவில் அடித்து கொல்லப்பட்ட ஆதிவாசி வாலிபரின் சகோதரிக்கு போலீஸ் வேலை

கேரளாவில் அடித்து கொல்லப்பட்ட ஆதிவாசி வாலிபரின் சகோதரிக்கு போலீசில் வேலை வழங்கப்பட உள்ளது. இதற்காக அவர் பயிற்சி மேற்கொள்ள உள்ளார்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே உள்ள ஆதிவாசி கிராமத்தை சேர்ந்தவர் மது (வயது 32). மனநலம் பாதிக்கப்பட்ட இவரை திருடியதாக கூறி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 16 பேர் சேர்ந்து அடித்து கொலை செய்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சியினர் கொலை செய்யப்பட்ட ஆதிவாசி வாலிபரின் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன் ஆதிவாசி வாலிபரின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்கினார். அப்போது ஆதிவாசி வாலிபர் மதுவின் தங்கை சந்திரிக்காவுக்கு அரசு வேலை வழங்கப்படும் என உறுதியளித்தார்.

இந்தநிலையில் பாலக்காடு மாவட்ட கலெக்டர் பட்டியலை தயார் செய்தார். அப்போது அதில் சந்திரிக்காவின் பெயர் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து கேரள அரசு சந்திரிகா உள்பட 74 பேருக்கு பணி நியமன ஆணை வழங்க உள்ளது.

சந்திரிக்காவுக்கு கேரள போலீசில் வேலை வழங்கப்பட உள்ளது. அவர் திருச்சூரில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் பயிற்சி மேற்கொள்ள உள்ளார். #Tamilnews

SCROLL FOR NEXT