கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ளது சின்னமுட்டம் மீன் பிடித்துறைமுகம். இந்த துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இயங்கி வருகின்றன. தற்போது மீன் பிடித் தடைகாலம் என்பதால் விசைப்படகுகள் அனைத்தும் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இன்று காலை 7.30 மணிக்கு சிறிய ரக பயணிகள் சொகுசு கப்பல் ஒன்று சின்னமுட்டம் துறைமுகத்துக்குள் நுழைந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவர்கள், கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் முகேஷ் ஜெயக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது அந்த சொகுசு கப்பலில் 4 மீனவர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் இலங்கை நீர்க்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
அவர்கள் வந்த கப்பல் 15 பேர் அமரக்கூடிய குளுகுளு வசதியுடன் கொண்ட கப்பல் ஆகும். அந்த கப்பலை அவர்கள் இலங்கையில் தயாரித்து விற்பதற்காக கோவாவுக்கு கொண்டு சென்றுள்ளனர். வழியில் டீசல் தீர்ந்ததால் சின்னமுட்டம் துறைமுகத்துக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தனர்.
அந்த மீனவர்கள் சொல்வது உண்மையா? என்பது பற்றி கன்னியாகுமரி டி.எஸ்.டி. வேணுகோபால் மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகளும் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் கியூ பிரிவு போலீசார் கப்பலில் வந்த 4 மீனவர்களிடமும் விசாரணை நடத்தினர்.
அவர்கள் வியாபார நோக்கத்துக்காக தான் வந்தார்களா? அல்லது வேறு எதாவது காரணத்துக்காக கன்னியாகுமரி வந்தார்களா? என்பது பற்றி விசாரணை நடந்தது. அவர்கள் உரிய ஆவணங்கள் வைத்துள்ளார்களா? என்பது பற்றியும் சோதனை நடத்தப்பட்டது.