செய்திகள்

ரவுடிக்கு கேக் ஊட்டிய போலீஸ் இன்ஸ்பெக்டர் தென் மண்டலத்திற்கு மாற்றம்

சேலத்தில் ரவுடிக்கு கேக் ஊட்டிய போலீஸ் இன்ஸ்பெக்டர் தென் மண்டலத்திற்கு மாற்றி டி.ஜி.பி. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

சேலம்:

சேலம் கொண்டலாம் பட்டியை சேர்ந்தவர் சுசீந்திரன் (வயது 33). தீவிர கண்காணிப்பு ரவுடிகள் பட்டியலில் உள்ள சுசீந்திரன் கடந்த 14-ந் தேதி தன் பிறந்த நாளை சேலம் கன்னங்குறிச்சி போலீஸ் குடியிருப்பில் கொண்டாடினார்.

அப்போது கன்னங்குறிச்சி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த கருணாகரன் அவருக்கு கேக் ஊட்டினார். தொடர்ந்து ரவுடியும் கருணாகரனுக்கு கேக் ஊட்டினார்.

இந்த படங்கள் வாட்ஸ்-அப்பில் பரவியதை பார்த்த உயர் போலீஸ் அதிகாரிகள் கருணாகரனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றினர். அந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணை முடிந்த நிலையில் கருணாகரனை தென் மண்டலத்திற்கு மாற்றி டி.ஜி.பி. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதனால் இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஓரிரு நாளில் தென் மண்டலத்தில் பொறுப்பேற்கிறார். #tamilnews