துப்பாக்கி சூடு நடந்த வனப்பகுதியில் இருந்து போலீசார் செம்மரகட்டைகளை மீட்டு வந்த காட்சி. 
செய்திகள்

திருப்பதி அருகே செம்மர கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு

திருப்பதி அருகே செம்மரக் கட்டைகளை வெட்டிக் கொண்டிருந்தவர்கள் போலீசார் மீது கல்வீசி தாக்கியதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். #Redsandalwood #Smugglers #Tirupati

மாலை மலர்

திருப்பதி:

திருப்பதி ரேணுகுண்டா அருகே உள்ள ஏர்பேடு கிருஷ்ணாபுரம் வனப்பகுதியில் விலை உயர்ந்த ஏராளமான செம்மரங்கள் உள்ளன. அவற்றை கடத்தல் கும்பல் அடிக்கடி வெட்டி கடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 20-க்கும் மேற்பட்ட கும்பல் ஐயப்ப பக்தர்கள் வேடத்தில் செம்மரங்களை வெட்டிக் கொண்டிருப்பதாக செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து கிருஷ்ணாபுரம் வனப்பகுதிக்கு சென்ற செம்மர கடத்தல் பிரிவு போலீசார் செம்மரம் வெட்டி கொண்டிருந்தவர்களை சரண் அடையுமாறு எச்சரிக்கை செய்தனர். ஆனால் அவர்கள் போலீசார் மீது கற்கள் மற்றும் கத்திகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பயந்து போன கும்பல் வனப் பகுதிக்குள் தப்பியோடிவிட்டனர்.

வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் ஒரு கார் மற்றும் 9 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய கும்பலை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். #Redsandalwood #Smugglers #Tirupati