போலீசார் வழங்கிய ரசீது. 
செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக ரசீது கொடுத்த போலீசார்

ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக போலீசார் வழங்கிய ரசீதின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மாலை மலர்

கோவை:

கோவை காளப்பட்டி அருகே உள்ள கடை வீதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது27). தனியார் நிறுவன ஊழியர். கடந்த 7-ந் தேதி இவர் தனது மோட்டார் சைக்கிளில் தமிழக- கேரள எல்லையில் உள்ள வேலந்தாவளத்துக்கு சென்றார். பின்னர் மாலையில் வீட்டுக்கு திரும்பினார். மோட்டார் சைக்கிள் கந்தே கவுண்டன் சாவடி அருகே வந்த போது கே.ஜி.சாவடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

கார்த்திக் ஹெல்மெட் அணியாமல் வருவதை பார்த்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.பின்னர் போலீசார் ஓட்டுனர் உரிமம், மோட்டார் சைக்கிள் பதிவு எண் நகல், இன்சூரன்ஸ் நகல் ஆகியவற்றை கேட்டு சரிபார்த்தனர். எல்லா நகல்களும் சரியாக இருந்ததால் கார்த்திக் ஹெல்மெட் அணியாமல் வந்ததற்காக அவருக்கு ரூ. 100 அபராதம் விதித்தனர். அந்த தொகையை அவர் உடனடியாக போலீசாரிடம் செலுத்தி ரசீதை பெற்றுக்கொண்டார்.

வீட்டுக்கு சென்று பார்த்த போது போலீசார் வழங்கிய ரசீதில் அபராத தொகை எவ்வளவு என்பது பற்றி குறிப்பிடபடவில்லை. மேலும் ரசீதில், ஹெல்மெட் அணியாமல் சென்றதற்கு பதிலாக சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு ,சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக போலீசார் ரசீது கொடுத்தது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.