செய்திகள்

இலங்கை விமான நிலையத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

இலங்கை விமான நிலையத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்திய துணை தூதரக அலுவலகம் முன்பு கோர்ட்டு தடையை மீறி நேற்று போராட்டம் நடத்தினர்.

கொழும்பு:

இலங்கையில் அம்பாந்தோட்டை என்ற இடத்தில் உள்ள மாத்தளை சர்வதேச விமான நிலையத்தை நிர்வகிக்க இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் அம்பாந்தோட்டையில் உள்ள இந்திய துணை தூதரக அலுவலகம் முன்பு கோர்ட்டு தடையை மீறி நேற்று போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அப்போதும் அவர்கள் கலையாததால் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4 போலீசார் காயம் அடைந்தனர். போராட்டத்தின் போது கலவரத்தில் ஈடுபட்ட 26 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், இந்த விமான நிலையம் சீனாவிடம் கடன் பெற்று ராஜபக்சே ஆட்சியில் கட்டப்பட்டது. ஆனால் இதை தற்போது இந்தியாவிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்து உள்ளது. இதை அனுமதிக்க மாட்டோம் என்றனர். 

SCROLL FOR NEXT