சென்னை:
சென்னை பசுமை வழிச்சாலையில் முதல்வர் இல்லம் மற்றும் வி.ஐ.பி.களுக்கு பாதுகாப்பு வழங்கும், காவல் பிரிவை சேர்ந்த 44 வயதான பெண் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், ஒரு வாரத்திற்கு முன், விடுமுறையில் சென்ற அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருடன் பணியாற்றிய காவலர்களுக்கு பரிசோதனை செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் முதல்வர் இல்லம் மற்றும் வி.ஐ.பி.களுக்கு பாதுகாப்பு வழங்கும், காவல் பிரிவை சேர்ந்த பெண் காவலர் ஒருவருக்கு கொரோனா என்ற தகவலுக்கு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட பெண் தலைமை காவலர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் பணியாற்றவில்லை. கொரோனா பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட பெண் காவலர் சென்னை கிரீன்வேஸ்சாலையில் ஏப்.30-ந்தேதி வரை பணியில் இருந்தார். மார்ச் 3-ந்தேதி நடந்த சோதனையில் பெண் காவலருக்கு கொரோனா இருப்பதாக 6 -ந்தேதி தெரிவிக்கப்பட்டது.
பின்னர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடந்த சோதனையில் பெண் காவலருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது.
மேலும் போலீசாருக்கு கொரோனா பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது என்று காவல் துறை தெரிவித்துள்ளது.